Saturday, July 29, 2017

Pallikudamnews

பாடப்புத்தகம் : உயர்நீதிமன்றம் தடை!

          என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 287 சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014 பிப்ரவரியில், தனியார் பதிப்பகப் புத்தகங்கள் வாங்க அனுமதித்த சிபிஎஸ்இ, இப்போது வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று ஜூலை-28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கக் கூடாது எனவும், தனியார் பதிப்பக புத்தகங்களின் தரம், விலை குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஒரே மனுவில் 287 பேர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றத்துக்கு வரும் ஸ்டாம்ப் கட்டண வருவாய் பாதித்துள்ளது. எனவே 287 பள்ளிகளும் தலா 1000 ரூபாய் வீதம் 2 .87 ஆயிரம் ரூபாயை நீதிமன்ற கட்டணமாக செலுத்தி ஒரு வாரத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்மந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்

No comments: