Monday, September 25, 2017

Pallikudam

தமிழ்நாட்டில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

Thursday, September 21, 2017

Pallikudam

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் கட்சியாக சென்ற வருடம் இந்த நாளில் தான் தனது கடைசி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற பெண் சிங்கம் மிகப்பெரிய இடத்தை ஆக்ரமித்து வைத்திருந்தார். அவரது அதிமுக கட்சியை பாராளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உயர்த்தினார். எம்ஜிஆருக்கு பின்னர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார் ஜெயலலிதா.

அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம், இலவச, மின்விசிறி, மிக்சி, ஆடு, மாடு வழங்கும் திட்டம் என பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ஜெயலலிதா.

அவரது கண் அசைவிற்கும், கட்டளைகளுக்கும் அத்தனை சக்தி உண்டு. சக்தி வாய்ந்த பெண் அரசியல்வாதியாக சிங்கம் போல வலம் வந்தார் ஜெயலலிதா. தனது அரசியல் வரலாற்றில் யாரும் செல்லாத உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சென்ற வருடம் இதே நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி சென்னையில் மெட்ரோ பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதுவே அவர் கடைசியாக மக்கள் மத்தியில் உயிரோடு தோன்றிய நாள் ஆகும்.

அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை.

இதனால் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்த இந்த தினத்தை அவரது அபிமானிகள் சோகத்துடன் சமூக வலைதளங்களில் அனுசரிக்கின்றனர். தமிழக அரசியலில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிய ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை ஒரு வருடம் ஆகியும் இதுவரை யாரும் நிரப்பவில்லை.

Wednesday, September 20, 2017

Pallikudam

DEEO meeting news:
1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

2. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இடிக்க, சரி செய்ய வேண்டியவைகளை BDO  ற்கு தெரியபடுத்தவும்.

3. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

4. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

5. பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல்  பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் , 31.3.2019 குள் NIOS exam pass செய்ய வேண்டும். இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

6. NAS தேர்வு 3,5,8 வகுப்புகளுக்கு இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும். அதற்கு மாணவர்களை தயாரிப்பு செய்ய வேண்டும்.

  7. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்பாடுகள்​செய்ய வேண்டும்.

8. SMART CLASS தொடக்க நிலையில்4 மற்றும், நடுநிலைப்பள்ளிகளில்​3ம்,  ஆரம்பிக்கப்படும்.

9. அறிவியல் கண்காட்சி வட்டார​அளவில் அனைத்து பள்ளிகளும் கலந்துகொண்டு​ சிறப்பாக அமைய வேண்டும். அதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும்.

10. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.

Pallikudam

EMIS செய்ய வேண்டிய பணி

User name: dise code
Password: ssa officeல் பெறப்பட்டது
Google - emis - tnschool education department -
Enter your school username & password பின்பு SIGN IN யை கிளிக் செய்க.
Step 1:
Dashboardல்
School email: உபயோகத்தில்​ உள்ளதாக இருக்கனும்
School mobile: HM mobile no கொடுத்தவுடன்      save மை கிளிக் செய்யவும்.
Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.
Step 3:
Student list - student profile (கிளிக் செய்யவும்) - student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV  என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் - பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student's) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது.

Pallikudam

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு

     அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன.

எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Thursday, September 14, 2017

Pallikudam Trs

அவ்வளவு என்ன  தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?  உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?

பொதுவான பார்வையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால்
அதிக சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...

உண்மை நிலை என்பதும் இது தானா?
வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...

பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் 98% சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...

பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.

வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்துகொள்கின்றனர்.

இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.

இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.

சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.

தனியார் பள்ளியிலிருந்து கட்டணக்கொள்ளையால் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மனசாட்சிக்குத் தெரியும், தனியார் பள்ளியில் தன் பிள்ளையை படிக்க வைத்தபோது பெற்றோருக்கு இருந்த அந்த கண்காணிப்பு என்பது அரசுப்பள்ளியில் சேர்த்தவுடன் மாயமாக ஆகிப்போகிறது. விலையில்லாமல் அளிக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை என்பது இங்கு மிகச்சரியாக பொருந்துகிறது.

அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.

பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !

இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும்.  இது இடத்திற்கு இடம் மாறுபடும்.

அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.

வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.

சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.

இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.

காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.

உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !

நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும்  போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.

சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.

மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!

இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி,  ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.

இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.

''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !

வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.

மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு அரசுப்பள்ளிகள் வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.

இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...

பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !

Monday, September 4, 2017

பள்ளிக்கூடம்

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 







பள்ளிக்கூடம் வலைப்பூ இனிய ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்!


Pallikudam

FLASH NEWS:-புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம்: கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம்
நாளை மறுநாள் முதல் (செப்.6) அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

        வரும் புதன்கிழமை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்.லாரி உரிமையானளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அசல் கேட்கப்படும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை அல்லது.ரூ.500 அபராதம். வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Sunday, September 3, 2017

Pallikudam

குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும்.

இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்த மாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது.

மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

Pallikudam

செல்போன், கணினி பயன்படுத்தும் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள்:பெற்றோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்

குழந்தைகள் செல்போன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ப்ளூ வேல்’ எனப்படும் மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டு, குழந்தைகள் மனதில் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளி மாணவர்கள் இணையதளத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சமீபகாலமாக மாணவர்கள் இணையதளங்களில் பயனற்ற, தேவையில்லாத மற்றும் மன அழுத்தம் தரக்கூடியவிளையாட்டுகளை விளையாடுவதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவது ஊடகங்கள் வழியாக தெரியவருகிறது. எனவே, மாணவர்கள் இணையதளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

* கணினி, செல்போன் வழி யாக இணையதளங்களில் உள்ள தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபற்றி அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பள்ளிகளில் தினமும் நடைபெறும் காலை வழிபாட்டு கூட்டத்தின்போது தலைமை ஆசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆலோசகர்கள் மூலம் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

* இணைய தளங்களில் தொடர்ந்து செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதால் ஏற்படும் உடல், மனரீதியிலான பாதிப்புகளைப் பள்ளி அறிவிப்பு பலகையில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தெரிவிக்க வேண்டும். புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு மைதானத்துக்குச் சென்று விளையாடுவது ஆகியவற்றில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

* தனிமைக்கு இடம்தராத வகையில், குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு, அவர்களோடு கலந்துரையாட வேண்டும். தனிமையில் இருக்கும்போதும், இணையதளம், குறுஞ்செய்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகும், அவர்களது நடத்தையில்மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

* அளவுக்கு அதிகமான இணையதளப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இணையதளப் பயன்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். தனி இடத்தில் அமர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்துவது கூடாது. அருகில் பெற்றோரோ, ஆசிரியரோ சென்றால் இணையதள முகவரியை மாற்ற முயல்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

* புதிய செல்போன் எண்கள், புதிய இணையதள முகவரிகளை தொடர்பு கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். சரியான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் மென்பொருளை கணினியில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

Pallikudam

இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன
       திருப்புவனம்:தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு
பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் கவனக்குறைவு, கற்பிக்கும் திறன் உள்ளிட்டவை காரணமாக பலரும் தனியார் பள்ளிகளின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கிராமப்புற பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்பது விதி, ஆனால் பல இடங்களில் ஆறு மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அரசு கருதி 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களை அருகில் இணைக்கப்படும் பள்ளிகளுக்கு அழைத்து செல்ல வேன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் அடுத்தாண்டு 20 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் மூடப்பட்டு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.
திருப்புவனம் ஒன்றியத்தில் 62 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலைப்பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100 பள்ளிகளில் 387 ஆசிரியர்,ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இதில் 6 ஆயிரத்து 414 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தாண்டு திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள அழகுடையான் ( 6 மாணவ, மாணவியர்கள்) புளியங்குளம் (9 மாணவ, மாணவியர்கள்), மேலசொரிகுளம் ( 4மாணவ, மாணவியர்கள்) ஆகிய மூன்று பள்ளிகள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்களின் சம்பளம், சத்துணவு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவை மிச்சமாகும் என கருதப்படுகிறது.
இதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் முடிந்து தமிழக அரசுக்கு முடிவு அனுப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்

Saturday, September 2, 2017

Pallikudam

அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர், 8ல் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, பாடத்திட்டக்குழு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்டக் குழுவும், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஜூலை, 20ல் கருத்தரங்கம் நடத்தி பணியை துவங்கியது.
சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை வல்லுனர்களிடம், ஆலோசனைகள் பெறப்பட்டன.
இதை தொடர்ந்து, ஆக., 21 முதல், பாட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது. கலைத்திட்ட குழுவின் பேராசிரியர்கள் கூடி, பொதுமக்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் அடிப்படையில், பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கையை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. வரும், 8ம் தேதிக்குள் சரிபார்ப்பு பணி முடிந்து, அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Pallikudam

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கடக ராசி

          சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசுவீர்கள்.
     இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, எந்த ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கிவைத்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் செலவுகளைச் சுருக்கப் பாருங்கள். சேமிப்புகள் கரையும். உங்களைப் பற்றியோ உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி, மக்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயின் உடல்நிலை பாதிக்கும். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. நீர்,நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் யோசித்து முடிவெடுங்கள். மகளுக்குத் திருமணம் திடீரென ஏற்பாடாகும். மகனுக்கு இருந்த கூடாப் பழக்கவழக்கங்கள் நீங்கும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். பிள்ளையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குரு பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணமெல்லாம் கைக்கு வந்து சேரும்.