Monday, September 25, 2017

Pallikudam

தமிழ்நாட்டில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
செஞ்சி கோட்டையை கட்டியவர் அனந்த தேவர் என்னும் கோனார் பரம்பரையினர் ஆவர். செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த தமிழ் மாமன்னர் ஆனந்த கோனார். 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர்.இவரை தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர் இவரின் மகன் கிருஷ்ண கோனார் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார் .மேலும் இந்திய அளவில் உள்ள சிறந்த கோட்டைகளுள் இதுவும் ஒன்று. பல மன்னர்கள் இக்கோட்டையை கைப்பற்ற எவ்வளவோ முயன்றபோதும் அவர்களால் இக்கோனார் பரம்பரையை வெல்ல முடியவில்லை. அனந்த கோனார் பரம்பரையினர் அழிந்த பிறகு வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆட்சி செய்தனர் அதன் பிறகு மேலும் சில மன்னர்கள் ஆட்சி செய்தனர்
ஆனந்த கோன் கி.பி. 1190-1240
கிருஷ்ணா கோன் 1240-1270
கோனேரி கோன் 1270-1290
கோவிந்த கோன் 1290-1310
வலிய கோன் அல்லது புலிய கோன் 1310-1320
இவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள்
இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர்
கோபலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330.
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.
இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.













No comments: