Sunday, September 3, 2017

Pallikudam

செல்போன், கணினி பயன்படுத்தும் குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள்:பெற்றோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்

குழந்தைகள் செல்போன், கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ப்ளூ வேல்’ எனப்படும் மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டு, குழந்தைகள் மனதில் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளி மாணவர்கள் இணையதளத்தை தகுந்த முறையில் பயன்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது உரிய அறிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சமீபகாலமாக மாணவர்கள் இணையதளங்களில் பயனற்ற, தேவையில்லாத மற்றும் மன அழுத்தம் தரக்கூடியவிளையாட்டுகளை விளையாடுவதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவது ஊடகங்கள் வழியாக தெரியவருகிறது. எனவே, மாணவர்கள் இணையதளத்தை சிறந்த முறையில் பயன்படுத்த பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

* கணினி, செல்போன் வழி யாக இணையதளங்களில் உள்ள தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபற்றி அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பள்ளிகளில் தினமும் நடைபெறும் காலை வழிபாட்டு கூட்டத்தின்போது தலைமை ஆசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆலோசகர்கள் மூலம் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

* இணைய தளங்களில் தொடர்ந்து செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதால் ஏற்படும் உடல், மனரீதியிலான பாதிப்புகளைப் பள்ளி அறிவிப்பு பலகையில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தெரிவிக்க வேண்டும். புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு மைதானத்துக்குச் சென்று விளையாடுவது ஆகியவற்றில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

* தனிமைக்கு இடம்தராத வகையில், குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு, அவர்களோடு கலந்துரையாட வேண்டும். தனிமையில் இருக்கும்போதும், இணையதளம், குறுஞ்செய்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகும், அவர்களது நடத்தையில்மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

* அளவுக்கு அதிகமான இணையதளப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இணையதளப் பயன்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். தனி இடத்தில் அமர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்துவது கூடாது. அருகில் பெற்றோரோ, ஆசிரியரோ சென்றால் இணையதள முகவரியை மாற்ற முயல்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

* புதிய செல்போன் எண்கள், புதிய இணையதள முகவரிகளை தொடர்பு கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். சரியான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் மென்பொருளை கணினியில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

No comments: